கல்முனைப் பிரதேச தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகின்ற கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தினை சகல அதிகாரங்களும் கொண்ட முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கல்முனை சுபத்திராராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சரஸ்வதி பூசையில் ஆன்மிக அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,
கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தினை சகல அதிகாரங்களும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படுவதன் மூலமே இப்பிரதேசத்தில் இன ஒற்றுமையை மேலோங்க வைக்க முடியும்.
இந்நாட்டில் வாழும் சகல பொது மக்களும் மனமகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். பொலிஸார் இன, மத,குல வேறுபாடுகள் இன்றி சேவையாற்ற வேண்டும்.
இதுவரை காலமும் இப்தார் நிகழ்வு, வெசாக் நிகழ்வு என்பன இடம்பெற்ற இப்பொலிஸ் நிலையத்தில் மனிதகுலத்திற்கு சக்தி அளிக்கும் சரஸ்வதிக்கு பூசை முதல் தடவையாக இடம்பெறுவது சந்தோஷமான விடயம்.
இதனையிட்டு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபார், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், இதற்கு வித்திட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் ஆகியோரை சமயத் தலைவர் என்ற வகையில் பாராட்டுகின்றேன்.
சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் மக்களுக்கு சிறந்த சேவையாற்றவும் வரும் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்ற நான் என்றும் தயாராகவுள்ளேன்.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் எனது உதவி, ஒத்தாசை நிச்சயம் இருக்கும். அதேபோன்று தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எமது விகாரைக்கும் உதவ முன்வர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment